தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறை அதிகாரிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், வேளாண் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் பெறுவதை கண்டித்தும் – ஏற்கனவே வாங்கிய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் காதில் – கழுத்தில் நகைகளை அணிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு
அளிக்க உள்ளே சென்றனர். ஆனால் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், காவல்துறையினருக்கும் – விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தமிழ் பல்கலைக்கழக காவல் உதவி ஆய்வாளர் விஷ்ணு பிரசாத் விவசாயிகளை ஒருமையில் தரக்குறைவாக பேசி தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.