தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சுமார் 2,043 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 39 வெவ்வேறு வழக்குகளில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு குழு அதிகாரிகள் முன்னிலையில் நல்கொண்டா காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) சந்தா தீப்தி, கஞ்சாவுக்கு கொள்ளிக்கட்டையால் தீ வைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நீதிமன்றத்தின் அனுமதியுடன், ஹேமச்சந்திரபுரம் கிராமத்தின் புறநகரில் உள்ள வனப்பகுதியில் காலை முதல் மாலை வரை இந்த கஞ்சாக்களை எரித்து அழித்தனர். இந்த சம்பவங்கள் தெலங்கானா மாநிலத்தில் கஞ்சா கடத்தல் எந்த அளவுக்கு நடந்து வருகிறது என்பதைக் காட்டுவதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.