அரியலூர் மாவட்டம், திருமானூரில் மாசி மகத்தை முன்னிட்டு ஜல்லி கட்டு விளையாட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். ஜல்லிகட்டில் அரியலூர், தஞ்சாவூர், திருச்சி பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகளும், 300 மாடு பிடிவீரர்களும் பங்கேற்றுள்ளனர். போட்டியில் 6 சுற்றுகளாக வீரர்களை களத்தில் இறக்கிவிட்டனர். அலங்கரித்து
கொண்டுவரப்பட்ட காளைகள் வாடி வாசல் வழியாக சீறி பாய்ந்தன. சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்களுக்கும், பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கு பெறும் காளைகளை பரிசோதனை செய்ய கால்நடை மருத்துவர்கள் மற்றும் காயம் அடைந்த வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ துறை சார்பில் மருத்துவ முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.