நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று திருப்பதியில் நடைபெற்றது. போக்குவரத்து இடையூறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பிற்கு அளிக்கப்பட்ட அனுமதியை திருப்பதி போலீசார் ரத்து செய்தனர். இந்த நிலையில் இன்று தனுஷ் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிட்ட பின் அவருக்கு கோவில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து தேவஸ்தான அட்சகர்கள் அவருக்கு வேத ஆசி வழங்கினர்.
தனுசுடன் சுமார் 30க்கும் மேற்பட்ட பவுன்சர்களும் திருப்பதி மலைக்கு வந்திருந்தனர்.
அவர் திருப்பதி மலையில் கால் வைத்தது முதல் அடிக்கு ஒருவராக நின்று கொண்டிருந்த பவுன்சர்கள் அவருக்கு
தீவிர பாதுகாப்பு அளித்து வந்தனர். ஏழுமலையானை வழிபட்ட பின் வெளியில் வந்த அவரிடம் பேட்டி எடுப்பதற்காக செய்தியாளர்கள் அங்கு காத்திருந்தனர்.
அப்போது அங்கு இருந்த பவுன்சர்கள் வீடியோ எடுக்க கூடாது என்று தடுக்க முயற்சித்தனர். இதனால் தொலைக்காட்சி சேனல்களின் ஒளிப்பதிவாளர்கள், பவுன்சர்கள் ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் தலையிட்ட தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் பவுன்சர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.