ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பிறகு தமிழகத்தில் நடக்கும் பிரபலமான போட்டிகளில் சேவல் சண்டை போட்டிகள் என்று கூறலாம். இருப்பினும் சேவல் சண்டை அனுமதியின்றி நடத்தப்பட்டால் கைது செய்யப்பட்டும் வருகிறார்கள். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட 12 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
எனவே, சேவல் சண்டைகள் போட்டி நடத்தவேண்டும் என்றால் முறையாக அனுமதி வாங்கியபிறகு தான் நடத்தவேண்டும். அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் ஜனவரி 27 மற்றும் ஜனவரி 28-ஆம் தேதி சேவல் சண்டைப் போட்டிகளை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவாரம் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜனவரி 27 மற்றும் ஜனவரி 28-ஆம் தேதி திருவள்ளூர் தங்கனூரில் சேவல் சண்டைபோட்டிகள் நடத்த அனுமதி அளிக்கப்படுவதாகவும், இருப்பினும், விதிமுறைகள் படி போட்டிகளை சரியாக நடத்தவேண்டும் எனவும் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் போட்டிகளை உடனே நிறுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
அதனை போல சேவல் சண்டைபோட்டு நடைபெறும் போது, சேவல்களுக்கு மது வழங்கவோ, அல்லது அதனுடைய காலில் கத்தி கட்டவோக் கூடாது என்ற விதிமுறையும் கொடுக்கப்பட்டுள்ள திருவள்ளூர் தங்கனூரில் சேவல் சண்டைபோட்டிகள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.