நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் லட்சுமி தெருவில் நேற்று காலை தூய்மைப் பணியாளர்கள் வழக்கம் போல் சாக்கடையில் தூய்மை பணியை மேற்கொண்டிருந்த போது, பிறந்து சில மணி நேரங்களேயான நிலையில், ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் கைகால்கள் அசைவின்றி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இது குறித்து ராசிபுரம் காவல்துறையினருக்கும், அரசு மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராசிபுரம் போலீஸார், குழந்தையை சாக்கடையில் இருந்து மீட்டனர். பின்னர் குழந்தையின் உடலை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அரசு மருத்துவமனையில், குழந்தையின் உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், கருவில் 5 மாத சிசு வளர்ந்த நிலையில், கலைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த முயற்சியில் பிரசவிக்கப்பட்ட குழந்தையை சாக்கடையில் வீசிச் சென்றிருக்கலாம் என தெரிவித்தனர். இது தொடர்பாக ராசிபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.