தஞ்சாவூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக இதுவரை 5,49,869 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது…
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக நடைபெற்ற முகாம்களில் 3,00,093 விண்ணப்பங்களும், இரண்டாம் கட்டமாக 2.22,721 விண்ணப்பங்களும் சிறப்பு முகாமில் 27,055 விண்ணப்பங்களும் என மொத்தமாக 5,49,869 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ், விண்ணப்பதாரர்களின் சந்தேகங்கள் குறித்து அறிந்துகொள்ள மாவட்டத்தில் 13 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பதாரர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். மகளிர் உரிமைத் திட்டம் இரண்டு நோக்கங்களைக் கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதாகும்.