நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் இன்று ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் அவர் சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் முன் ஜாமீன் கேட்கப்படுகிறது என கூறுவதற்கு பதிலாக, நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என முன்ஜாமீன்
மனுவில் கூறப்பட்டிருந்தது. இதைப்பார்த்த நீதிபதி, கோர்ட்டு உங்களுக்கு விளையாட்டு மைதானம் ஆகிவிட்டதா என கண்டித்தார்.
உடனடியாக முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார் மன்சூர் அலிகான். அதைத்தொடர்ந்து இன்றே ஆயிரம் விளக்கு மகளிர் போலீசில் மன்சூர் அலிகான் ஆஜராவதாக அறிவித்தார். அதன்படி மதியம் 2.50 மணிக்கு காரில் போலீஸ் நிலையம் வந்தார். சிவப்பு கவலர் டீ சர்ட், கருப்பு நிற பேண்ட் அணிந்தபடி தெம்பாக போலீஸ் நிலையத்துக்குள் நடந்து சென்றார்.
அவரிடம் என்ன நடந்தது, என்ன பேசினீர்கள் என போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 35 நிமிடம் நடந்தது. மன்சூர் அலிகான் பேசிய பேச்சு குறித்து வீடியோவை அவரிடம் காட்டி வாக்குமூலம் பெற்றனர். அவர் அளித்த வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்து கொண்டனர். சரியாக 3.30 மணிக்கு மன்சூர் அலிகான் அங்கிருந்து புறப்பட்டார். விசாரணை குறித்து மன்சூர் அலிகான் கூறியதாவது:
எனது பேச்சால் திரிஷா வருத்தம் அடைந்திருந்தால், நானும் வருத்தப்படுகிறேன். நான் ஜாலியாக கொடுத்த பேட்டியை தவறாக புரிந்து கொண்டனர். நான் தலைமறைவாகிவிடுவேன் என செய்தி பரவியதால் இன்றே போலீசில் ஆஜரானேன். எனது பேச்சில் உள்அர்த்தம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.