Skip to content
Home » தக்காளி தந்த வாழ்வு… திடீர் லட்சாதிபதியான விவசாயிகள்

தக்காளி தந்த வாழ்வு… திடீர் லட்சாதிபதியான விவசாயிகள்

இந்தியா முழுவதும் தக்காளி விலை அதிகரித்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தாலும், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதாவது அவர்களுக்கு அதிக அளவில் லாபம் கிடைத்து வருகிறது. அதன்படி தக்காளி உற்பத்தியில் இந்தியாவில் 2ம் இடத்தில் உள்ள கர்நாடக மாநிலம், கோலார் ஏ.பி.எம்.சி.யார்டு மார்க்கெட்டில் பேத்தமங்களாவை சேர்ந்த பிரபாகர் குப்தா மற்றும் அவரது சகோதரர் இணைந்து தக்காளியை ரூ.38 லட்சம் வரை விற்பனை செய்து லாபம் சம்பாதித்துள்ளனர்.

விவசாயிகளான இவர்கள் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இவர்கள் நிலத்தில் விளையும் தக்காளியை கோலார் ஏ.பி.எம்.சி.யார்டு மார்க்கெட்டிற்கு வந்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி கடந்த கடந்த 11-ந் தேதி சகோதரர்கள் இருவரும் கோலார் மார்க்கெட்டில் தக்காளியை விற்பனை செய்தனர். அதாவது தலா 15 கிலோ எடை கொண்ட 2 ஆயிரம் பெட்டி தக்காளியை விற்பனைக்காக வைத்திருந்தனா். வழக்கம்போல ஏலம் விடப்பட்டதில் சகோதரர்களின் தக்காளிக்கு மவுசு அதிகமாக இருந்தது. அதன்படி 2 ஆயிரம் பெட்டி தக்காளி ரூ.38 லட்சம் வரை ஏலம்போனது.

அதாவது ஓரு பெட்டி தக்காளி ரூ.1,900-க்கு விலைபோனது. இதுகுறித்து விவசாயி பிரபாகர் குப்தா கூறியதாவது:- கடந்த 2021-ம் ஆண்டு தலா 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போது உரிய விலை கிடைக்கவில்லை. இந்தமுறை தக்காளி வரத்து குறைந்திருப்பதால், எங்கள் தக்காளிக்கு மவுசு அதிகமானது. அதாவது வழக்கமாக ஒரு நாளைக்கு கோலார் மார்க்கெட்டிற்கு 8 ஆயிரம் டன் தக்காளி விற்பனைக்காக வரும். ஆனால் தற்போது 1000 டன் தான் தக்காளி வரத்து உள்ளது. இதன் காரணமாக ஒரு பெட்டி தக்காளி ரூ.1,900 வரை ஏலம் போனது. அதன்படி 2 ஆயிரம் பெட்டி தக்காளி ரூ.38 லட்சத்துக்கு ஏலம் போனது. இதனால் எங்களுக்கு போதிய லாபம் கிடைத்துள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!