Skip to content
Home » திருச்சியில் வீடு இடிந்து…..2 குழந்தை உள்பட 4 பேர் பலி

திருச்சியில் வீடு இடிந்து…..2 குழந்தை உள்பட 4 பேர் பலி

  • by Senthil

திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தஇரண்டு சிறுமிகள் உட்பட 4பெண்கள் வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து ஆட்டோ டிரைவர். இவரது தாய் சாந்தி (70)மனைவி விஜயலட்சுமி (38), குழந்தைகள் பிரதீபா (12), ஹரிணி (10)என ஐந்து பேர் வசித்து வந்தனர்.

மாரிமுத்துவின்  தங்கை கணவர் சென்னையில் இறந்து விட்டதால் அந்த துக்க நிகழ்ச்சிக்காக மாரிமுத்து நேற்று சென்னைக்கு சென்று விட்டார்.வீட்டில் சாந்தி, விஜயலட்சுமி,  குழந்தைகள் பிரதீபா, ஹரிணி ஆகிய நான்கு பேரும் வழக்கம்போல் படுத்து உறங்கி உள்ளனர்.

 

அவர்களது வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிப்பாடுகளில் சிக்கிய சாந்தி, விஜயலட்சுமி, பிரதீபா, ஹரிணி ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.நள்ளிரவு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது அப்பகுதியில் உள்ள யாருக்கும் தெரியாது. காலையில் தான் தெரிந்துள்ளது.  இன்று அதிகாலை பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டு மாடியில் சென்றபோது வீடு இடிந்து கிடந்ததை பார்த்தார்.

அப்பொழுது மாரிமுத்து வீட்டின் மேற்குறை இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக வந்து பார்த்தபோது மாரிமுத்துவின் வீட்டின் மேற்கூரை இடிந்து கிடப்பது தெரியவந்தது. உடனடியாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டதோடு உடனடியாக திருச்சிதீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி தீயணைப்பு துறையினர்இடிபாடுகளில் சிக்கி இறந்து கிடந்த நான்கு பேர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பறிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உலகமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள  நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இடிந்துபோன வீடு 1972ம் ஆண்டு கட்டப்பட்டது என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!