சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் காவல் நிலையத்தி எஸ்.எஸ்.ஐயாக பணியாற்றியவர் ஜான் செல்வராஜ். இவர் நேற்று வங்க தேச எல்லையான ஜானியாபாத் என்ற பகுதியின் வழியாக வங்க தேசத்திற்குள் நுழைய முயன்றபோது, வங்கதேச ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். ஜான் செல்வராஜை சோதனை செய்தபோது அவரிடம் எஸ்.எஸ்.ஐக்கான அடையாள அட்டை, மற்றும் 75 ஆயிரம் அமெரிக்க டாலர், கட்டு கட்டாக இந்திய கரன்சி ஆகியவையும் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வங்கதேச ராணுவம், இந்திய ராணுவத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இவர் ஏன் அங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. எஸ்.எஸ்.ஐ. ஜான் செல்வராஜ் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் உள்ளவரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. ஏற்கனவே இவர் திருட்டுத்தனமாக இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் காரணமாக 10 ஆண்டுகள் பணியில் இல்லாமல் இருந்ததார். மீண்டும் பணியில் சேர்ந்தவர் அவர் வங்கதேசம் சென்று அங்கிருந்து போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.
எஸ்.எஸ்.ஐ. ஜான் செல்வராஜ் திருச்சி கிராப்பட்டியை சேர்ந்தவர் என்று தெரியவந்து உள்ளது. இங்கு தான் இவரது மனைவி, மகன் உள்ளனர். தற்போது செல்வராஜ் குடும்பத்தை பிரிந்து தனியாக இருப்பதாகவும் தெரிகிறது. தற்போது திருச்சியில் உள்ள இவரது உறவினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஜான் கடந்த
2003ம் ஆண்டு வரை திருச்சி மாநகர போலீசில் பணியாற்றியவர் என கூறப்படுகிறது.