ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 750 பேர் படுகாயம் அடைந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் இன்னும் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. இதனால், அந்த மார்க்கத்தில் செல்லும் சென்னை – ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இன்றைய நாள் முத்தமிழறிஞர் கலைஞரின் சிலைக்கு மட்டும் மரியாதை செலுத்தி, இந்த பயங்கரமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திடுமாறு தலைமை கழகம் சார்பாக கேட்டுக்கொண்டனர். இதனை தொடர்ந்து இன்று முத்தமிழறிஞர் கலைஞரின் 100-ஆவது பிறந்தநாள் தொடர்பாக இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் – பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தநிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்றோ, நாளையோ திருச்சி வருகை புரிவதாக இருந்தது. மேலும் டெல்டா மாவட்டங்களுக்கும் செல்ல இருந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்து காரணமாக முதல்வர் ஸ்டாலின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் திருச்சி வருகை ரத்தாகிறது என தகவல் வௌியாகியுள்ளது. விழா தொடக்கப் பொதுக்கூட்டம் வேறொரு நாளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.