திருச்சி மாநகராட்சியை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அலங்கார தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தின் கீழ் பகுதியில், புல்தரை, பூச்செடிகளுடன் கூடிய சிறு பூங்கா, துருப்பிடிக்காத இரும்பு குழாய்கள், தகடுகளால் ஆன அலங்கார தடுப்புகள், வண்ண ஓவியங்கள், அலங்கார மின் விளக்குகளால் அழகுபடுத்தப்பட்டு வருகின்றது. இந்த பூங்காவின் தடுப்புகளில் பெரிய வாள் போன்ற கூர்மையான தடுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
அவை பார்ப்பதற்கு அழகுற காணப்பட்டாலும், அவற்றின் நுனிப்பகுதி, மிகவும் கூர்மையான வாள்போன்ற அமைப்புடன்
ஆபத்துகளை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இந்த பகுதியில் இரு சக்கர வாகனம் மற்றும் நடந்து செல்லுகிறார்வர்கள் அதிகம். சிறு விபத்து நடந்து இந்த தடுப்பில் விழுந்தால் கூட கூர்மையான வாள்போன்ற நுனிப்பகுதியால் குத்தி கிழிக்கும் அபாயம் உள்ளது.
பாலத்தின் அடியில் சிறு பூங்கா அமைக்கப்படுவதால் அப்பகுதியைச் சேர்ந்த சிறார்கள் அதற்குள் வந்து செல்ல வாய்ப்புகள் உண்டு. எனவே அந்த தடுப்புகளில் கைவைத்தாலோ அல்லது ஏறி இறங்கினாலோ கூர்மையான பகுதியால் கிழிக்கும் அபாயம் உள்ளது. இதைச் சுட்டிக்காட்டி, ஆபத்து ஏற்படாத வகையில் பொதுமக்கள் அதிகளவில் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் இது போன்று ஆயுதங்கள் போல் உள்ள அலங்கார தடுப்புகள் அமைக்க வேண்டாம். அல்லது அவற்றில் ரப்பர்களால் ஆன பாதுகாப்பு உறைகள் பொருத்த வேண்டும் என மக்கள் சக்தி இயக்க பொருளாளர் கே.சி. நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார், சிலம்பம் கார்த்தி, ஷர்மிளா, அகிலா ஆகியோர் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.