திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் தங்கவேல்(65), இவரது மனைவி தைலி(61) இவர்கள் இருவரும் , கரூர் வாங்கல் ஓடையூர் பகுதியில் சரவணக்குமார் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் வேலை செய்து வந்தனர். இவரும் அந்த தோப்பிலேயே ஒரு குடிசையில் தங்கி இருந்தனர். கடந்த 15 வருடங்களாக அங்கேயே தங்கி வேலை செய்து வந்தனர்.
இன்று காலை தங்கவேல், தைலி நடமாட்டம் இல்லை. காலை 8 மணி அளவில் தோட்டத்திற்கு வந்தவர்கள் கணவன், மனைவி இருவரும் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இவர்கள் தலையில் கல்லைபோட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது .
இது குறித்து வாங்கல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் மற்றும் போலீசார் வந்து சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலைக்காக வாங்கல் ஓடையூருக்கு சென்ற நிலையில் அங்கு கொலை செய்யப்பட்டுள்ளனர். தைலியின் காது அறுக்கப்பட்டு இருந்தது. அது போல அவர் அணிந்திருந்த செயினையும் காணவில்லை. எனவே அந்த நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
சிறிய அளவிலான நகைக்காக கணவன், மனைவி இருவரையும் கொலை செய்த கொலையாளிகள் யார் என பல கோணங்களில் போலீசார் விசாரிக்கிறார்கள். அந்த தோட்டத்தின் உரிமையாளரிடமும் போலீசார் விசாரிக்கிறார்கள். கொலை நடந்த இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சடலங்கள் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் காட்டு பகுதிக்குள் ஓடியது. யாரையும் பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் வந்து கைரேகை களை பதிவு செய்தனர்.