Skip to content
Home » திருச்சி அருகே குடிபோதையில் தகராறு… தடுக்க முயன்ற முதியவர் கொலை… 2 பேர் கைது..

திருச்சி அருகே குடிபோதையில் தகராறு… தடுக்க முயன்ற முதியவர் கொலை… 2 பேர் கைது..

திருச்சி மாவட்டம், முசிறி அருகே முத்துராஜா பாளையம் மேட்டுதெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன் (67) கூலி வேலை செய்து வந்துள்ளார். இவரது மகன் கார்த்திக். அதே பகுதியை சேர்ந்த நண்பர் அஜித் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளுக்கு மாலை வாங்குவதற்காக மேட்டுப்பாளையத்திற்கு கார்த்திக், அஜித் இருவரும் சென்றுள்ளனர். அப்போது முத்துராஜாபாளையத்தில் உறவினர் வீட்டில் வசித்து வரும் விஜய் (18) குடிபோதையில் கார்த்தியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அஜித், கார்த்திக் இருவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். அதனை தொடர்ந்து விஜய் மீண்டும் கார்த்திக் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவரும் சண்டை போட்டுக் கொண்டதால் அவர்களை தடுப்பதற்காக கார்த்தியின் தந்தை ஸ்ரீரங்கன் சென்று விலக்கியுள்ளார். அப்போது விஜய் மற்றும் அவரது உறவினர் லாரி டிரைவர் விஜயகுமார் (30) ஆகியோர் அருகில் இருந்த குச்சியால் ஸ்ரீரங்கனை தாக்கியதில் வலது நெற்றி பொட்டில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்துள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் விரைந்து சென்று ஸ்ரீரங்கன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விஜய் அவரது உறவினர் விஜயகுமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!