கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்( வண்டி எண் 12643)ரயில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்சி ரயில்வே சந்திப்பிற்கு வந்தது. பின்னர் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டது. திருச்சி அடுத்த அப்போது பிச்சாண்டார் கோவில் ரயில் நிலையம் தாண்டி வாளாடி ரயில் நிலையம் நோக்கி சென்றபோது தண்டவாளத்தின் நடுப்பகுதியில் இரண்டு பெரிய லாரி டயர்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதிவேகத்தில் வந்த
கன்னியாகுமரி ரயில் டிரைவர் இதை கவனித்தபோதிலும் அவரால் உடனடியாக நிறுத்த முடியவில்லை. இதனால் பயங்கர சத்தத்துடன் டயர் மீது ரயில் மோதியது. மோதிய வேகத்தில் ரயிலின் சில பெட்டிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ரயிலும் நின்று விட்டது.
உடனடியாக திருச்சியில் உள்ள ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கிருந்து தொழில் நுட்ப வல்லுனர்கள், ரயில்வே போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் ரயிலின் பழுதை நீக்கி 40 நிமிடம் தாமதமாக இன்று அதிகரிலை 1.45 மணிக்கு ரயிலை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக விருத்தாச்சலம் ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிவண்ணன் விசாரணை செய்து வந்த நிலையில் அப்பகுதியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் தற்போது விசாரணை செய்து வருகின்றனர். ரயில்வே எஸ்.பி.யும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். ரயிலை கவிழ்த்து நாசவேலை செய்ய இந்த செயலை மர்ம நபர்கள் செய்திருக்கலாம் என போலீசார் விசாரிக்கிறார்கள்.