Skip to content

திருச்சி- தாம்பரம் சிறப்பு விரைவு ரயில் 29ம் தேதியுடன் முடிவடைகிறது.. பயணிகள் ஏமாற்றம்

  • by Authour

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக இயக்கப் பட்டு வரும் திருச்சி – தாம்பரம் திருச்சி – தாம்பரம் சிறப்பு விரைவு இரயில் (வண்டி எண் : 06190/ 06191) வருகின்ற 29 ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த சிறப்பு விரைவு இரயில் திங்கள், வியாழன் தவிர மற்ற 5 நாட்களும் முழு பயணிகள் பயணிக்க இயங்கி வருகிறது. தற்சமயம் நீட்டிக்கப்படும் தேதி இது நாள் வரை அறிவிக்கப் படாத காரணத்தால், முன் பதிவுச் செய்யும் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே மேற்படி இரயில் வண்டியை அவ்வப் போது தவணை முறையில் நீட்டிப்புச் செய்யாமல், நிரந்தர தினசரி இரயிலாக இயக்கப் பட வேண்டும். இந்த இரயில் அறிமுகப் படுத்தப் பட்டதிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளைச் சார்ந்த இரயில் பயணிகள், அரசு அலுவலர்கள் அவசரச் சிகிச்சைக்காக சென்னை சென்று வருவோர், குறிப்பாக டெல்டா மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து சென்னை பகுதிகளில் பணியாற்றி வரும் ஐ.டி துறை சார்ந்த ஊழியர்கள், வியாபார நிமித்தமாக காலையில் சென்று, இரவே திரும்பும் வணிகர்கள் மற்றும் மயிலாடுதுறை சந்திப்பின் வழியாக சென்னை சென்று வரும் நாகை, காரைக்கால், திருவாரூர் பகுதிகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது நிதர்சனமான உண்மை.

தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடு துறை பகுதிகளிலிருந்து தினசரி ஏராளமான பயணிகள் இதில் பயணம் செய்து வருகின்றனர். மேலும் பகல் நேரத்தில் இயக்கப் பட்டு வரும் சோழன் அதி விரைவு வண்டியில், எப்பொழுது பார்த்தாலும் இடம் கிடைக்காமல் காத்திருப்பு பட்டியலில் உள்ளது என்பதை விட, பயணிகள் பகல் முழுவதும் பயணித்து இரவு தான் சென்னை செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் திருச்சி – தாம்பரம் இண்டர் சிட்டி சிறப்பு விரைவு இரயில் காலையில் புறப் பட்டு மதியம் சென்னை சென்று, உடன் அங்கிருந்து மாலையில் புறப் பட்டு இரவே திருச்சிக்கு வந்து சேருவதால் அனைத்து வகை பயணிகளுக்கும் பெரும் பலன் தரக் கூடிய நல்ல சேவையாகும். இந்த வண்டியின் மூலம் தென்னக இரயில் வேக்கு எதிர்பார்த்ததை விட டிக்கெட் வருவாய் அதிகமாக கிடைத்து வருகிறது. தொடர்ந்து வண்டியின் பயன்பாடு 80 சதவீதத்திற்கு மேல் இருந்து வருகிறது என்பது சிறப்பாகும். எனவே இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த இண்டர் சிட்டி சிறப்பு விரைவு இரயிலை தற்காலிக நீட்டிப்புச் செய்யாமல் நிரந்தர தினசரி இரயிலாக இயக்கப் பட வேண்டும் என்பதே டெல்டா பகுதி பயணிகளின் எதிர்ப் பார்ப்பாகும்.

error: Content is protected !!