திருச்சி மாவட்டம், லால்குடி அருகே எசனைகோரையில் புதிய தொழில்நுட்பமான ட்ரோன் மூலம் வாழை பயிர்களுக்கு உரம் தெளித்து செயல் விளக்கம் செய்து காட்டிய காந்தி கிராம பல்கலைக்கழக வேளாண் இறுதியாண்டு மாணவர்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பி. எஸ் சி இறுதியாண்டு படிக்கும் வேளாண் மாணவர்கள் லால்குடி பகுதியில் ஊரக வேளாண் பணி அனுபவத்திற்கான பயிற்சி எடுத்துக் கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக எசனைகோரை கிராமத்தில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி நாராயணசாமிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் வாழை தோட்டத்தில் நவீன தொழில்நுட்பமான ட்ரோன் மூலம் உரம் தெளித்து செயல் விளக்கம் செய்து காட்டினர். இதுகுறித்து வேளாண் இறுதியாண்டு பயிற்சி மாணவர்கள் கூறியதாவது…..
நவீன தொழில்நுட்பமான ட்ரோன் மூலம் உரம் மற்றும் பூச்சி மருந்து தெளிப்பதால் ஒரு ஏக்கர் வாழை பயிருக்கு ஒன்றிலிருந்து இரண்டு டேங்க் அளவில் 10 நிமிடத்தில் தெளித்து விடலாம்.பணியாட்களை கொண்டு இயல்பான தெளிப்பான் மூலம் உரம் மற்றும் மருந்து தெளிக்கும் போது ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 டேங்க் வரை
தேவைப்படுகிறது.அதற்க்கான கால நிர்ணயம் 3 மணி நேரம் வரை தேவைப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு
நேரம் செலவு குறைகிறது. தற்போது நிலவும் ஆட்கள் பற்றாக்குறையாலும் சாகுபடி செலவு அதிகரிப்பதாலும் விவசாயிகளுக்கு நிகர வருமானம் குறைந்துள்ளது. இதனை நிவர்த்தி செய்ய ட்ரோன் மூலம் உரம் மற்றும் மருந்துகள் தெளிப்பதன் மூலம் வருமானத்தை பெருக்க புதிய திட்டம் அறிமுகம் செய்துள்ளனர். மேலும் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதால் விவசாயிகள் காலத்தே சாகுபடிப் பணிகளை மேற்கொண்டு பயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம் என கூறினார்கள்.
இந்நிகழ்வில் காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் இறுதி ஆண்டு மாணவர்கள் வெங்கடேஷ், சக்தி பாலாஜி, நவீன் சுந்தர், தானுமலைய பெருமாள், அழகு பாண்டியன் மற்றும் லால்குடி வேளாண் அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.