Skip to content
Home » மயிலாடுதுறை… டூவீலரிலிருந்து விழுந்த பெண் பலி.. கைக்குழந்தை ஆஸ்பத்திரியில் அனுமதி..

மயிலாடுதுறை… டூவீலரிலிருந்து விழுந்த பெண் பலி.. கைக்குழந்தை ஆஸ்பத்திரியில் அனுமதி..

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே கடலங்குடி ஊராட்சி தெற்கு காருகுடியை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (39). கூலித்தொழிலாளி. அவரது மனைவி சுகந்தி (37). மகள் சுகவினா (9) மகன் முத்தமிழன் (8), எட்டுமாத முகேஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் முத்துகிருஷ்ணன் தனது மனைவி சுகந்தி மற்றும் குழந்தைகளுடன் காட்டுமன்னார்கோவிலில் தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள் வாங்கி கொண்டு அங்கிருந்து புறப்பட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினர்.

முட்டம் உயர்மட்ட பாலத்தில் வந்தபோது அந்த பகுதியில் தெற்கு ராஜன்வாய்க்கால் சாலையையும், பாலத்தையும் இணைக்கும் இடத்தில் உள்ள பள்ளத்தில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் இறங்கியது. அப்போது கையில் வைத்திருந்த 8 மாத குழந்தையுடன் சுகந்தி, மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு சாலையில் சுருண்டு விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த சுகந்தி, ரத்த வெள்ளத்தில் குழந்தைகளின் கண்ணெதிரே துடிதுடிக்க பரிதாபமாக இறந்தார்.
மணல்மேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுகந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த 8 மாத குழந்தை, மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்தில் முத்துக்கிருஷ்ணன் மற்றும் இரண்டு குழந்தைகள் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த கிராமவாசி கூறுகையில் கடலூர் மாவட்டத்தையும் மயிலாடுதுறை மாவட்டத்தையும் இணைக்கக்கூடிய உயிர்மட்ட பாலத்திலிருந்து சரிவான பகுதியில் ராஜன் வாய்க்கால் பாலத்தை இணைக்க கூடிய இடத்தில் பள்ளமாக உள்ளதால் சரிவான இடத்தில் வேகமாக வரும் போது நிலை தடுமாறி பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இதுவரை இப்பகுதியில் மூன்று நபர்கள் உயிரிழந்தனர். இப்பகுதியில் இந்த விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுவதால் இந்த சாலையில் பாலத்தின் பள்ளத்தை சமன்படுத்தி சீரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!