திருச்சி, நாடாளுமன்ற உறுப்பினர், முதன்மைச் செயலாளர், மறுமலர்ச்சி திமுக., துரை வைகோ கூறியிருப்பதாவது..
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் நிர்வாக அலுவலக அரங்கத்தில் நேற்று, நேரு இளையோர் அமைப்பு சார்பில் நடந்த சர்தார் வல்லபாய் படேல் நினைவினைப் போற்றிடும் வகையில் ஒற்றுமை தினப்பேரணி நடந்தது. இந்தப் பேரணியை தொடங்கி வைப்பதற்கு முன்பு கல்லூரி மாணவர்களிடம் நான் பேசினேன்.
அதாவது, இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில், நாடு முழுவதும் ஒற்றுமை (UNITY) தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் உன்னதமான நோக்கம் ஒற்றுமை. 1947 – ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்றது. விடுதலை பெற்ற மகிழ்ச்சி இருந்தபோதிலும், 565 சமஸ்தானங்களாகப் பிரிந்திருந்த இந்தியாவை எப்படி ஒருங்கிணைப்பது என்ற கவலை தலைவர்களுக்கு இருந்தது. விடுதலைக்குப் பின்பும், நாம் பார்க்கின்ற இந்தியா வரைபடத்தில் இல்லை. பிரிந்து கிடந்த சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து இந்தியா என்ற ஒரு நாடு இருக்கிறது என்றால், அதற்காகப் பாடுபட்டவர் சர்தார் வல்லபாய் படேல். அதனால்தான் அவரை இன்று நினைவு கொள்கின்றோம். வேற்றுமையில் ஒற்றுமை (Unity in diversity) என்பதுதான் இந்தியா என்ற கட்டமைப்பின் பலம். அவருடைய கனவு நினைவாக வேண்டும் என்றால் இந்தியா வல்லரசு நாடாக வளர வேண்டும். அதற்காகத்தான் Unity இந்த ஒற்றுமை தினத்தை நாடு முழுவதும் கொண்டாடுகின்றோம்.
இங்கே இருக்கிற மாணவர்களுக்குச் சொல்கிறேன். நாம் இந்தியர்களாக ஒன்றிணைய வேண்டும். என்னுடைய ஆசை என்ன தெரியுமா, எதிர்காலத்தில் நாடுகளைக் கடந்து நாம் அனைவரும் மனிதர்களாக ஒன்றுபட வேண்டும். சாதி, மதம் இன வேறுபாடின்றி இந்தியா என்ற ஒரு குடையின் கீழ் நாம் இணைந்திருக்கிறோம்.
இளைஞர்கள் எப்படி வளர வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக, மேடையில் இருக்கிற துணை ஆட்சியர் முபாரக் ஒருவரே சாட்சி. இவர் அருகாமையில் இருக்கிற பெரம்பலூரைச் சேர்ந்தவர். உங்களைப் போலவே இருக்கிறார். உங்களைப் போல எளிய உடை உடுத்தி இருக்கின்றார். எப்படி இவர் உயர்ந்தார். இந்தியா என்கிற நாடு காரணம். நமது அரசியலமைப்பும், சமதர்மச் சிந்தனையுமே காரணம். அப்படி நீங்களும் முன்னேற வேண்டும்.
சர்தார் வல்லபாய் பட்டேலின் 150-ஆவது பிறந்தநாள் ஒற்றுமை தினம் வாயிலாக நான் கேட்க விரும்புவது, இளைஞர்களாகிய நீங்கள் சாதி, மத ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றேன்.
இதனைத் தொடர்ந்து மாணவர்களின் ஒற்றுமைப் பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தேன் என்று இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் என்னுடன் திருச்சி மாவட்ட துணை ஆட்சியர் பரூக், பாரதிதாசன் பல்கலைக் கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் பேராசிரியர் ராஜேஸ் கண்ணா, My bharat ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன், பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராமஜெயம், பேராசிரியர் செந்தில்நாதன் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
கழக துணைப் பொதுச் செயலாளர் மருத்துவர் ரொகையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி இரா.சோமு, மணவை தமிழ்மாணிக்கம் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

