கும்பகோணத்தில் ஏழை காய்கறி வியாபாரியிடம் போலி 100 ரூபாய் நோட்டைக் கொடுத்து மர்ம நபர் ஒருவர் ஏமாற்றிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 70 வயதான அஞ்சம்மாள். இவர் பழைய பாலக்கரை பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு இவரது கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர், 100 ரூபாய்க்கு காய்கறிகளை வாங்கிக்கொண்டு, அதற்குப் பதிலாகக் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட போலி 100 ரூபாய் நோட்டைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேகமடைந்த அந்த மூதாட்டி, போதிய வெளிச்சத்தில் அந்த நோட்டைச் சோதித்துப் பார்த்தபோதுதான் அது போலி ரூபாய் நோட்டு என்பது தெரியவந்தது.
உழைத்துச் சேர்த்த பணத்தில் ஏமாற்றப்பட்டதை அறிந்து அவர் அதிர்ச்சியில் உறைந்தார்.
கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலி ரூபாய் நோட்டுகளை மர்ம நபர்கள் புழக்கத்தில் விடுகிறார்களா என்ற அச்சமும் பீதியும் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் மத்தியில் தற்சமயம் எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
