அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 27-சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வைப்பறையினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி, சிதம்பரம் (தனி) ஆகிய 6 தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் 19.04.2024 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும்
மையங்களுக்கு கொண்டுவரப்பட்டு, அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்டமன்ற தொகுதி வாரியாக தனி அறையில் வைக்கப்பட்டு அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு அறை ஆகியவற்றை பார்வையிட்டு துணை இராணுவத்தினர், சிசிடிவி கேமரா கண்காணிப்பு, மாவட்ட காவல்துறை பாதுகாப்பு ஆகியோர்கள் மூலம் செயல்படுத்தப்படும் சுழற்சி முறை பாதுகாப்பு குறித்தும் பார்வையிட்டு கேட்டறிந்தார். மேலும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பாதுகாப்பிற்கான குறிப்பேட்டு பதிவுகளை பார்வையிட்டு பதிவேட்டில் மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கையெழுத்திட்டார். இந்த ஆய்வின்போது, உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஷீஜா, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் கலிலூர் ரகுமான், உதவி செயற்பொறியாளர் கட்டடம் ஜெயந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.