தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சிம்பு (சிலம்பரசன் டி.ஆர்) நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “அரசன்”. இப்படத்தை கலைப்புலி எஸ். தானு தயாரிக்க, இசை அமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது மற்றொரு மிகப்பெரிய சர்ப்ரைஸ் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், “மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இன்று, அதிகாரப்பூர்வ போஸ்டருடன் வெளியான அறிவிப்பில் “மனிதம் இணைகிறது… மகத்துவம் தெரிகிறது” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த ஒரு வரி மட்டுமே வெற்றிமாறன் – விஜய் சேதுபதி கூட்டணியின் தாக்கத்தை உணர்த்துகிறது. ரசிகர்கள் சமூக வலைதளங்களில் “வெற்றி-விஜய் சேதுபதி மீண்டும் ஒன்று சேர்ந்தது போதும், படம் சூப்பர் ஹிட் உறுதி” என்று கொண்டாடி வருகின்றனர்.
வெற்றிமாறன் – விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு இது புதிய கூட்டணி அல்ல. ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய “வடசென்னை” படத்தில் ராஜன் என்ற மிக முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி தான் முதலில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். அப்போது தேதி பிரச்சினை காரணமாக அவரால் நடிக்க முடியவில்லை. அந்த கதாபாத்திரத்தை பின்னர் இயக்குநர் அமீர் தேர்வு செய்து நடித்தார்.
அப்போது வடசென்னையை மிஸ் செய்த விஜய் சேதுபதி இப்போது அதே வெற்றிமாறன் இயக்கத்தில் “அரசன்” மூலம் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு “காத்திருந்த பலன் கிடைத்தது போல” உணர்வை ஏற்படுத்தியுள்ளது. சிம்பு – வெற்றிமாறன் கூட்டணி முதல் முறையாக உருவாகிறது. இதில் விஜய் சேதுபதியும் இணைந்ததால், “அரசன்” படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே உச்சத்தை தொட்டுள்ளது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும், 2026-ல் திரைக்கு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

