இந்திய நாட்டின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்தும் அயராது பாடுபட்டும் தாய் நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து, மறைந்தும் மக்களின் மனங்களில் என்றும் நிறைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் பிறந்த நாள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 152-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அவரின் திருவுருவச் சிலை, உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மேயர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, தமிழ்நாடு முதல்ல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் ப. சுப்பராயன் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.