அரசு மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் இறங்கிய பெண்கள்: கைது செய்ய முயன்ற நிலையில் காவல்துறையின் வாகனத்தில் அடியில் படுத்து போராடிய இளைஞரால் பரபரப்பு.
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்துள்ள சிறுகளத்தூர் கிராமத்தில், அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. சிறுகளத்தூரிலிருந்து பொன்பரப்பி மற்றும் பெரியாக்குறிச்சி கிராமங்களுக்கு இரவு நேரங்களில் பொதுமக்கள் சுதந்திரமாக சென்று வர முடியாத சூழல் உள்ளதாகவும், இரவு நேரங்களில் ஆங்காங்கே சாலையின் ஓரம் அமர்ந்து மது பிரியர்கள்,

மது அருந்துவதால் தங்களுக்கு நடந்து செல்லக்கூட அச்சம் ஏற்படுவதாகவும் கூறி பொன்பரப்பி மற்றும் சிறுகளத்தூர் கிராம மக்கள் இணைந்து இன்று டாஸ்மாக் கடையின் முன்பாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை கைது செய்ய காவல்துறை முயன்றது.

காவல்துறையின் வாகனங்களில் ஏற மறுத்த பெண்களை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் ஏற்றியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென காவல்துறையின் வாகனத்தில் அடியில் சென்று போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் வருவாய் துறையினர், டாஸ்மாக் நிர்வாகத்தினர், காவல் துறையினர் ஆகியோர் இணைந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
