திருப்பதி மாவட்டம், ரேணிகுண்டாவில் உள்ள ரயில்வே ஸ்டேசனில் திருவனந்தபுரம்- புதுடெல்லி செல்லும் கேரளா விரைவு ரயில் நேற்று வந்து நின்றது. அப்போது ரயிலில் இருந்து இறங்கிய ஒரு வாலிபர் நடைமேடையில் கூச்சலிட்டபடியே ரயிலின் மீது ஏறினார். அப்போது திடீரென உயரழுத்த மின் கம்பியைப் பிடிக்க முயன்றார். இதனை கண்ட ரயில்வே அதிகாரிகள் உடனடியாக மின் விநியோகத்தை நிறுத்தினர்.
உடனே ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தற்கொலைக்கு முயன்ற வாலிபரை பாதுகாப்பாக மீட்டனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் வாலிபரை போலீஸ் ஸ்டேசனிற்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் தன்னை கைது செய்தால், 48 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்றும், 3 நட்சத்திர அதிகாரி மட்டுமே வர வேண்டும் என்று கத்தினார்.
தொடர்ந்து போலீசார் விசாரணையில், அந்த வாலிபர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டது. அவருக்கு மனநலக் குறைபாடு உள்ளதா? அல்லது மது போதையில் இருந்தாரா? என்பதை கண்டறிய போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் ரேணிகுண்டா ரயில்வே ஸ்டேசனில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
