அங்கீகாரம் இல்லாத கட்சிகள் , மக்களவை தேர்தலில் போட்டியிட சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்குகளை விசாரித்த கோர்ட், தேர்தல் ஆணையத்தை அணுகும்படி உத்தரவிட்டது. அந்த வகையில் பாஜக கூட்டணியில் இடம் பெற்ற அமமுகவுக்கு உடனடியாக குக்கர் சின்னம் கிடைத்தது. தமாகா தொலைத்துவிட்ட சைக்கிளை மீண்டும் மீட்டுக்கொண்டு வந்தது.
அதே நேரத்தில் விசிகவுக்கும், மதிமுகவுக்கும் இன்னும் சின்னம் கிடைக்கவில்லை. 27ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள். தேர்தலுக்கு இன்னும் 28 நாட்கள் தான் உள்ளது. அதற்குள் அவர்கள் தங்கள் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். எதிர்க்கட்சிகளை முடக்க வேண்டும் என்ற பாஜகவின் எண்ணத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இன்னும் சின்னம் வழங்காமல் இழுத்தடிக்கிறதோ என்ற சந்தேகம் எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.