Skip to content
Home » பெங்களூரு ரயில் நிலையத்தில் பெண் சடலம்….. கொலையாளி 3 பேர் கைது

பெங்களூரு ரயில் நிலையத்தில் பெண் சடலம்….. கொலையாளி 3 பேர் கைது

பெங்களூரு பையப்பனஹள்ளி சர் எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் முனையத்தின் முக்கிய நுழைவு வாயில் பகுதியில் கடந்த 13-ந் தேதி காலையில் பீப்பாய் ஒன்று கேட்பாரின்றி கிடந்தது. அதை ரயில்வே போலீசார் திறந்து பார்த்தபோது, அதில்,  ஒரு பெண்ணை கொலை செய்து அவரது உடலை பாலிதீன் கவரால் மூடி, பீப்பாய்க்குள் திணித்து வைத்திருந்தனர்.

இந்த சம்பவம் பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பையப்பனஹள்ளி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். முதலில் அந்த பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது உள்ளிட்ட எந்த தகவலும் தெரியாமல் இருந்தது.

ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலமாக ஆட்டோவில் வந்த மர்மநபர்கள், ரெயில் நிலையத்தின் முன்பாக பெண் உடல் திணிக்கப்பட்டு இருந்த பீப்பாயை வைத்து சென்றது தெரியவந்தது. அந்த காட்சிகள் மூலமாக விசாரணை நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், அந்த பெண் பீகார் மாநிலத்தை சேர்ந்த தமன்னா (வயது 27) என்று அடையாளம் காணப்பட்டது. அவர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய ரெயில்வே போலீசார், தமன்னா கொலை தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த கமால் (வயது 21), தன்வீர் (28), ஷாகீப் (25) என்று தெரியவந்துள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பீகாரை சேர்ந்த தமன்னா முதலில் அப்ரோஜ் என்பவரை திருமணம் செய்திருந்தார். அப்ரோஜ் மாற்றுத்திறனாளி ஆவார். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக 2 பேரும் பிரிந்து விட்டனர். அத்துடன் அப்ரோஜிடம் இருந்து தமன்னா விவாகரத்தும் பெற்றிருந்தார். அதன்பிறகு, அப்ரோஜின் பெரியப்பா மகனான இந்திகாப்பை தமன்னா 2-வது திருமணம் செய்து கொண்டு இருந்தார்.

தனது 2-வது கணவருடன் தமன்னா ஜிகனியில் வசித்து வந்தார். இதற்கிடையில், அப்ரோஜின் சகோதரர் நவாப் பெங்களூரு சிட்டி மார்க்கெட் பகுதியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். தனது சகோதரரை விவாகரத்து செய்து விட்டு, இந்திகாப்பை தமன்னா 2-வதாக திருமணம் செய்ததால் நவாப் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு இருந்தது.

இதனால் தமன்னாவை பழிவாங்க நவாப் திட்டமிட்டுள்ளார். இதற்காக கடந்த 12-ந் தேதி விருந்து கொடுப்பதாக நவாப் மற்றும் உறவினர்கள் தமன்னாவை அழைத்துள்ளனர். அதன்படி, ஜிகனியில் இருந்து சிட்டி மார்க்கெட்டுக்கு அவர் வந்துள்ளார். விருந்து நிகழ்ச்சி முடிந்ததும் தமன்னாவின் கழுத்தை துப்பட்டாவால் நவாப் உள்ளிட்டோர் சேர்ந்து இறுக்கி கொலை செய்திருக்கிறார்கள். பின்னர் தமன்னாவின் உடலை பாலிதீன் கவரில் சுற்றி பீப்பாய்க்குள் திணித்து வைத்துள்ளனர். அவரது உடலை பீகாருக்கு கொண்டு செல்ல கொலையாளிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்திற்கு ஆட்டோவில் பீப்பாயை கொண்டு வந்துள்ளனர். ஆனால் ரெயில் நிலையத்தின் முக்கிய நுழைவு வாயிலில் பீப்பாயை வைத்து விட்டு நவாப் உள்ளிட்டோர் தலைமறைவானது தெரியவந்துள்ளது.  இந்த கொலையில் 8 பேர் ஈடுபட்டு இருந்தனர். அதாவது நவாப், ஜமால், மஜர், அஸ்தாப், கபூல், கமால், தன்வீர், ஷாகீப் ஈடுபட்டு இருந்தனர். அவர்களில் கமால், தன்வீர், ஷாகீப் ஆகிய 3 பேர் மட்டுமே கைதாகி உள்ளனர். நவாப் உள்பட 5 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!