தஞ்சாவூரில் கரந்தை, அரசு போக்குவரத்து கழக டெப்போ பகுதி, கீழவாசல் உட்பட கிழக்கு காவல் நிலைய பகுதிகளில் பொதுமக்கள் தங்களின் செல்போன்களை தொலைத்துவிட்டதாக புகார்கள் கொடுத்தனர். இதையடுத்து கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் சிறப்பு எஸ்ஐக்கள் பழனியாண்டி, குருசாமி, காவலர் கண்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் செல்போன் டவர் சிக்னலை வைத்து தொலைந்து போன செல்போன்களை மீட்டனர்.
அந்த வகையில் 17 விலை உயர்ந்த செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த செல்போன்கள் உரிமையாளர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது, இந்த செல்போன்களை உரிமையாளர்களிடம் டவுன் டிஎஸ்பி ராஜா ஒப்படைத்தார். மீட்கப்பட்ட செல்போன்களின் மதிப்பு ரூ.3.50 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னர் டவுன் டிஎஸ்பி ராஜா கூறுகையில், விலை அதிகம் உள்ள செல்போன்களை மிகவும் கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் பழைய செல்போன்கள் வாங்குபவர்களும் அதற்கு உரிய பில் உள்ளதா என்பதை பார்த்து வாங்குதல் மிகவும் முக்கியமான ஒன்று. இதேபோல் உபயோகப்படுத்தப்பட்ட செல்போன்களை வாங்கி விற்பவர்களுக்கும் கவுன்சிலிங் அளித்து அவற்றை உரிமையாளர்கள் தான் விற்பனை செய்கிறார்களா என்பதை தெரிந்து பின்னர் வாங்கி விற்பனை செய்ய வேண்டும் என்றார்.