திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டு திண்டுக்கல் சிறையில் கடந்த 1ம் தேதி அடைக்கப்பட்டார். சிறையில் அவர் உணவு சாப்பிடாமல் கதறி அழுதார். விடிய விடிய அழுது கொண்டே இருந்ததால் அவரை மதுரை சிறைக்கு மாற்றினர்.
இந்த நிலையில் அவரிடம் மேலும் விசாரணை நடத்த 3 நாள் காவலில் எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திண்டுக்கல் முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி மோகனா 2 நாள் காவல் வழங்கி உத்தரவிட்டார். எனவே இன்று மாலை அவர் போலீஸ் காவலில் எடுக்கப்படுவார் என தெரிகிறது.