Skip to content
Home » வாணியம்பாடி…..பள்ளி வளாகத்தில் பள்ளம்….. தேங்கிய நீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி

வாணியம்பாடி…..பள்ளி வளாகத்தில் பள்ளம்….. தேங்கிய நீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி

  • by Senthil

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த சிக்கனாங்குப்பம் கிராமத்திலிருந்து அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக, சிக்கனம்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 10 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி அங்கிருந்த முரம்பு மண்ணை எடுத்து சாலை பணிக்காக பயன்படுத்தி உள்ளனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழை காரணமாக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கி  இருந்தது.

நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்குச் சென்ற, சிக்கனாங்குப்பம் ராசன் வட்டம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கோவிந்தராஜின் மகள் மோனிகா (வயது 10), வேலு மகள் ராஜலட்சுமி (13), மணிவேல் (7) ஆகியோர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் பள்ளிக்கு வந்தனர். அவர்கள் பள்ளி வளாகத்தில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது மணிவேல் மேலே வந்து விட்டான். 2 மாணவிகளும் மேலே வராததை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவன் அந்த பகுதியில் இருந்தவர்களிடம் கூறினான்.

பொதுமக்கள் அங்கு வந்து நீரில் மூழ்கிய 2 சிறுமிகளையும் மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது இருவரும் இறந்து போனதாக தெரிவித்தனர். இறந்த மோனிகா 5-ம் வகுப்பும், ராஜலட்சுமி 9-ம் வகுப்பும் படித்து வந்தனர். தகவல் அறிந்த போலீசார் 2 மாணவிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிக்கனாங்குப்பத்தைச் சேர்ந்த பொதுமக்களும், இறந்து போன பள்ளி மாணவிகளின் உறவினர்களும் ஒன்று சேர்ந்து அம்பலூர் போலீஸ் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டனர். மேலும் மாணவிகளின் உடல்களை வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் குழந்தைகள் இறப்பிற்கு காரணமான ஒப்பந்ததாரர் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டவர்கள் மீதும், பள்ளி வளாகத்திற்குள் முரம்பு மண் எடுக்க அனுமதி அளித்த கல்வித்துறை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எழுத்து மூலமாக புகார் அளிக்கும்படியும் அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.  இருப்பினும் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரையில் போலீஸ் நிலையத்தின் நுழைவு பகுதியில் அவர்கள் அமர்ந்திருந்தனர். அதைத்தொடர்ந்து வாணியம்பாடி உதவி கலெக்டர் மற்றும் தாசில்தார் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு சம்பந்தப்பட்ட பள்ளியில் தோண்டப்பட்ட குழியை உடனடியாக மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் அடிப்படையில் அவர்கள் பிரேத பரிசோதனைக்கு ஒப்புக்கொண்டு பின்னர் மாலை 4 மணி அளவில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு மாணவிகளின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

2 மாணவிகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் சாலை அமைக்கும் பணி ஒப்பந்ததாரர் தெக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி, சிக்கனாங்குப்பம் ஊராட்சி செயலாளர் தேவன், சிக்கனாங்குப்பம் அரசு பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) கெஜலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் காசிநாதன் உள்பட சிலர் மீது பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாகவும், தகுந்த பாதுகாப்பு செய்யப்படாமல் இருந்ததாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!