தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட வாண்டையார் இருப்பு கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் (70) என்பவர் கடந்த வியாழக்கிழமை காலமானார். துக்கத்தில் கலந்து கொள்ள தியாகராஜனின் உறவினர்கள் அரியலூர் மாவட்டம், அன்னகாரன்பேட்டை புதுத் தெரு இளஞ்சேகரன் (60), குலோத்துங்கன் (58) ஆகியோர் வந்தனர்.
தொடர்ந்து அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன், செல்வராஜ், கலியமூர்த்தி ஆகியோருடன் இளஞ்சேகரன், குலோத்துங்கள் இருவர் என மொத்தம் 5 பேரும் நேற்று மதியம் கொள்ளிடம் ஆற்றில் எதிர் கரையிலுள்ள அன்னகாரன்பேட்டை கிராமத்துக்குச் செல்வதற்காக தண்ணீரில் இறங்கி நடந்து சென்றனர். இதில் ராஜேந்திரன், செல்வராஜ், கலியமூர்த்தி ஆகிய 3 பேரும் கரையேறிய பின்னர் தங்களுடன் வந்த இளஞ்சேகரன், குலோத்துங்கன் இருவரையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தனர்.
இருவரும் ஆற்று தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து திருப்பனந்தாள் போலீசாருக்கும், திருவிடைமருதூர் தீயணைப்பு நிலையத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது இதையடுத்து தீயணைப்புத்துறையினர் நேற்று மாலையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் சென்று இளஞ்சேகரன், குலோத்துங்கனை தேடினர். இந்நிலையில் குலோத்துங்கன் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இளஞ்சேகரன் நிலை என்ன என்பது தெரியவில்லை.