Skip to content
Home » லஞ்சம்……தாலுகா அலுவலக ஊழியருக்கு 2 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் அதிரடி

லஞ்சம்……தாலுகா அலுவலக ஊழியருக்கு 2 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் அதிரடி

பாபநாசத்தில் விவசாயியிடம் ரூ. 5,000 லஞ்சம் வாங்கிய வட்ட அலுவலக உதவியாளருக்கு கும்பகோணம் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள உடையார்கோவில் வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் டி. ராஜவேலு (55). இவர் 2013 ம் ஆண்டில் தனது விவசாய நிலத்தில் பி.வி.சி. குழாய் பதிப்பதற்காகத் தனியார் வங்கியில் ரூ. 4 லட்சம் கடனுதவி கோரினார். அப்போது, தனியார் வங்கி நில மதிப்பு சான்று கேட்டதால், பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ராஜவேலு மனு கொடுத்தார்.
ராஜவேலு கேட்ட நில மதிப்புச் சான்றைத் தருவதற்கு பாபநாசம் வட்டாட்சியர் அலுவலக உதவியாளர் எஸ். கல்யாணசுந்தரம் (58) ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதை கொடுக்க விரும்பாத ராஜவேலு தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி வழக்குப் பதிந்து, 2013, டிசம்பர் 3 ம் தேதி ராஜவேலுவிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்யாணசுந்தரத்தை கைது செய்தார்.
இது தொடர்பாக கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி டி. சண்முகப்ரியா விசாரித்து, கல்யாணசுந்தரத்துக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 8,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!