Skip to content
Home » 30 குண்டுகள் முழங்க …..அரசு மரியாதையுடன் …. சங்கரய்யா உடல் இறுதிச்சடங்கு நடந்தது

30 குண்டுகள் முழங்க …..அரசு மரியாதையுடன் …. சங்கரய்யா உடல் இறுதிச்சடங்கு நடந்தது

  • by Senthil

சுந்தரப் போராட்ட வீரரும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் சங்கரய்யா  தனது 102வது வயதில் நேற்று காலை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்   காலமானார்.  தகவல் அறிந்ததும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரிக்கு சென்று  சங்கரய்யா உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.  முதல்வருடன்  அமைச்சர்கள் சேகர்பாபு,  தா.மோ. அன்பரசன்  ஆகியோரும் சென்றனர்.

அதைத்தொடர்ந்து  சங்கரய்யா உடல் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  பின்னர் தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு  கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக சங்கரய்யா உடல் வைக்கப்பட்டது.

தொடர்ந்து,  சங்கரய்யாவின் உடலுக்கு   மார்க்சிய கம்யூனிஸ்ட்  பொதுச்செயலாளர்  சீத்தாராம் யெச்சூரி,  மாநில செயலாளர்   பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,   அமைச்சர் மா. சு. சுப்பிரமணியன், நடிகர் சத்யராஜ், அமைச்சர் மா சுப்பிரமணியன்,  நடிகர் பார்த்திபன்,  நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், நடிகை சி ஆர் சரஸ்வதி, திமுக நாடாளுமன்றக்

குழுத் தலைவர் டி ஆர் பாலு,  காங்கிரஸ்  எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்கள்  அஞ்சலி செலுத்தினர்.

காலை 10 மணியளவில்  அலங்கரிக்கப்பட்ட வேனில் சங்கரய்யா உடல் ஏற்றப்பட்டு  இறுதி ஊர்வலம் புறப்பட்டது. இதில் திமுக சார்பில் ஆ. ராசா எம்,பி, ஆர்.எஸ். பாரதி, வாசுகி,  மார்க்சிய கம்யூ மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன்,  பத்திரிகையாளர் இந்து  என். ராம்,  உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வீர வணக்கம், வீர வணக்கம் என தொண்டர்கள் முழக்கமிட்டவாறு பேரணி  சென்றது.

வேனுக்கு முன்னால்  மார்க்சிய கம்யூனிஸ்ட் தொண்டர்கள் சிவப்பு சட்டை அணிந்து அணிவகுப்பு நடத்தி சென்றனர். சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்திற்கு  பேரணி சென்றதும்   அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது. இதில்  வைகோ எம்.பி,   ஆ. ராசா,  ஆர்.எஸ். பாரதி, திக தலைவர் வீரமணி, தொல் திருமாவளவன்,  சீமான் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்கள்  இரங்கல் உரையாற்றினர்.  பின்னர் வேனில் இருந்து உடல் இறக்கப்பட்டு    அங்கு   ஆயுதப்படை காவலர்களின்   சோக  இசை இசைக்கப்பட்டு,  30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன்  சங்கரய்யா உடல்   மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!