Skip to content
Home » 36 ஆண்டுகளாக வயிற்றில் இரட்டை குழந்தைகளை சுமந்த முதியவர்….

36 ஆண்டுகளாக வயிற்றில் இரட்டை குழந்தைகளை சுமந்த முதியவர்….

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் சஞ்சு பகத். 1963-ம் ஆண்டு பிறந்த இவருக்கு சிறு வயதில் இருந்தே வயிறு மிகவும் பெரிதாக காணப்பட்டது. என்றாலும் அவர் ஆரோக்கியமாகவே இருந்து வந்தார். 20 வயதாகும் வரை அவர் தனது பெரிய வயிற்றை பற்றி கவலைப்படவில்லை. அப்பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் வேலை செய்து வந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரது வயிறு மேலும் மேலும் பெரிதாகி பலூன் போல காணப்பட்டது. என்றாலும் சஞ்சுபகத் தனது வீங்கிய வயிற்றை பற்றி கவலைப்படாமல் வேலையை தொடர்ந்து வந்தார். அவரது நண்பர்களும், அப்பகுதி மக்களும் சஞ்சுபகத்தை கர்ப்பிணி என கேலி-கிண்டல் செய்து வந்தனர். இது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியது.

ஒரு கட்டத்தில் வயிறு வீக்கம் காரணமாக அவருக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சுவாசிக்க முடியாமல் அவர் திணறினார். இதையடுத்து 1999-ம் ஆண்டு அவரை மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அஜய்மேத்தா, சஞ்சுபகத் கட்டியால் அவதிப்பட்டதாக கருதினார். அவரின் வயிற்றில் பெரிய கட்டி இருக்கலாம் என்று கருதிய டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். அப்போது அவரது வயிற்றில் கை, கால்கள், பிறப்பு உறுப்பு மற்றும் சில பகுதிகள், தாடைகள் மற்றும் கை, கால்கள் ஆகியவற்றை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது ‘மறைந்து போகும் இரட்டை நோய்க்குறி’ என்று கருதினர். அதாவது அவரது இரட்டையர் கர்ப்ப காலத்தில் இறந்து விட்டதாக நினைத்தனர்.

 ஆனால் பின்னர் நடந்த பரிசோதனை மற்றும் ஆய்வில் அவருக்கு இருக்கும் பாதிப்பு அரிதிலும் அரிய நோய் பாதிப்பான ‘கருவில் கரு’ என்று கண்டறியப்பட்டது. அவர் கடந்த 36 ஆண்டுகளாக தனது வயிற்றுக்குள் இரட்டை குழந்தைகளை சுமந்து கொண்டு இருப்பது தெரிய வந்தது. இந்த வகை நோய் பாதிப்பு என்பது பிறக்காத இரட்டை குழந்தை உடலில் ஒரு ஒட்டுண்ணி போல வாழ்கிறது. பின்னர் அந்த இரட்டை குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினர். தனது வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட குழந்தைகளை சஞ்சு பார்க்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!