கடலில் மீன்வளத்தைப் பெருக்கும் நோக்கில், மத்திய அரசால் கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட வங்கக்கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கிய தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் (ஜூன் 14) நிறைவடைகிறது. இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகள் மற்றும் வலைகளைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
தடைக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, சென்னை காசிமேடு, கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இருந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் இன்று நள்ளிரவு முதல் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.
