“7 ரூபாய் டிக்கெட்டுக்கு 10 ரூபாயா ?” – கோவை உக்கடத்தில் தனியார் பஸ்ஸை மறித்துக் கேள்வி கேட்ட தைரிய பெண்!
“RTO-விடம் கம்ப்ளைண்ட் பண்ணிக்கோ” என நடத்துநர் அடாவடி: நடுரோட்டில் பஸ்ஸை மறித்ததால் பரபரப்பு!
கோவையில் 7 ரூபாய் டிக்கெட்டிற்கு 10 ரூபாய் வசூலித்து விட்டு, “இஷ்டம் இருந்தால் ஏறு, இல்லையென்றால் இறங்கு” என அடாவடியாகப் பேசிய தனியார் பேருந்து நடத்துநரை, பெண் ஒருவர் நடுரோட்டில் பேருந்தை மறித்து கேள்வி கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, காந்திபுரத்தில் இருந்து உக்கடம் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் நகரப் பேருந்துகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், உக்கடத்தில் இருந்து அண்ணா சிலை பேருந்து நிறுத்தத்திற்குச் செல்வதற்காகப் பெண் பயணி ஒருவர் தனியார் பேருந்தில் ஏறி உள்ளார். வழக்கமாக உக்கடத்தில் இருந்து

அண்ணா சிலை நிறுத்தத்திற்கு அரசு மற்றும் அனைத்து நகரப் பேருந்துகளிலும் 7 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், குறிப்பிட்ட அந்தத் தனியார் பேருந்தின் நடத்துநர் 7 ரூபாய் டிக்கெட்டிற்கு 10 ரூபாய் வாங்கி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் பயணி, “ஏழு ரூபாய் டிக்கெட்டுக்கு எதுக்கு அண்ணா பத்து ரூபாய் வாங்குறீங்க?” என நியாயமாகக் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு அந்த நடத்துநர் கனிவாகப் பதில் கூறாமல், “நான் அப்படித் தான் வாங்குவேன்… இஷ்டம் இருந்தா வா, இல்லாட்டி இறங்கிப் போ! வேணும்னா RTO-கிட்ட போய் கம்ப்ளைண்ட் பண்ணிக்கோ” என மிக அடாவடித்தனமாகப் பேசி உள்ளார்.
நடத்துநரின் இந்த அலட்சியமான பதிலால் கொதிப்படைந்த அந்தப் பெண், உடனடியாகப் பேருந்தில் இருந்து கீழே இறங்கி, நடுரோட்டில் நின்று அந்தப் பேருந்தை நகர விடாமல் மறித்து நிறுத்தி நியாயம் கேட்டார்.
ஒரு பெண்ணாக நடுரோட்டில் இறங்கித் தனியார் பேருந்தை மறித்து, நடத்துநரின் அதிகப்படியான கட்டண வசூல் மற்றும் அடாவடிப் பேச்சைத் தைரியமாகக் கேள்வி கேட்ட காட்சியைப் பார்த்து அங்கு இருந்த சக பயணிகளும் பொதுமக்களும் திரண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் கடும் பரபரப்பு நிலவியது.
கோவையில் சில தனியார் பேருந்துகளில் இதுபோன்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிப்பதும், கேள்வி கேட்கும் பயணிகளிடம் நடத்துநர்கள் மரியாதையின்றி நடப்பதும் தொடர் கதையாகி வருவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (RTO) உடனடியாக ஆய்வு நடத்தி, அதிகக் கட்டணம் வசூலித்த அந்தத் தனியார் பேருந்து மற்றும் நடத்துநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ள்ளனர்.
