திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தின் வழியாக தினமும் 25க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது. பல்லாயிரகணக்கான மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள். இதனால் இரவும், பகலும் இங்கு பயணிகள் கூட்டம் வந்து சென்று கொண்டே இருக்கும். பயணிகள் வருகை மற்றும் ரயில்கள் அதிகரிப்பு காரணமாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 8வது பிளாட்பாரம் அமைக்கப்பட்டது.
ரூ.13.5 கோடி செலவில் 620 மீ. நீளத்தில் இது அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் 26 பெட்டிகள் கொண்ட ரயில் இந்த பிளாட்பாரத்தில் நிற்க வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த பிளாட்பாரத்தில் கல்லுக்குழி வழியாக வந்தால் பாலமோ, சுரங்கப்பாதையோ இல்லாமல் நேரடியாக 8வது பிளாட்பாரத்திற்கு வந்து விடலாம். இதன் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன், கூடுதல் கோட்ட மேலாளர் ராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த பிளாட்பாரத்தில் இருந்து சோழன், ராமேஸ்வரம், திருச்செந்தூர், பனாரஸ் வாராந்திர ரயில், அந்த்யோதயா சூப்பர் பாஸ்ட் உள்பட பல ரயில்கள் இயக்கப்படும்.