Skip to content
Home » திருமணத்திற்கு பணம் வைத்திருந்த விவசாயி வீட்டில் திடீர் சோதனை..

திருமணத்திற்கு பணம் வைத்திருந்த விவசாயி வீட்டில் திடீர் சோதனை..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிங்கராயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கலசாமி (80).
இவர் தீவிர விவசாயி. சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் முந்திரி மற்றும் நிலக்கடலை உள்ளிட்ட சிறுதானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்கள் விவசாயம் செய்யும் அடைக்கலசாமி, அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வட்டிக்கு கொடுத்து பணம் ஈட்டி வருகிறார்.
இந்நிலையில் அவரது வீட்டில் கணக்கில் வராத பணம் இருப்பதாக தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கு தொலைபேசியில் புகார் வந்தது. பறக்கும்படை அலுவலர் சிலம்பரசன் தலைமையிலான குழுவினர்,
அடைக்கலசாமி வீட்டிற்கு சென்று சோதனை விட்டு விசாரணை நடத்தினர்.
அடைக்கலசாமியின் வீட்டில் அதிகாரிகள் குழுவினர் நடத்திய தேடுதலில் பல லட்சம் ரூபாய் பணம் ரொக்கமாக வீட்டில் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விவசாயி அடைக்கலசாமியிடம் விசாரித்தபோது, அவர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பணம் அவரது பேத்தியின் திருமணத்திற்காக ஏற்பாடு செய்து வைக்கப்பட்டிருந்த பணம் என்று தெரிவித்துள்ளார். அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் ரொக்கப்பணம் எதையும் பறிமுதல் செய்யாமல் அங்கிருந்து திரும்பினர்.
இந்நிலையில் திருச்சியில் இருந்து வருமான வரி துறையின் தேர்தல் நகர்வுகள் பிரிவு அதிகாரி துணை ஆணையர் கண்ணன் தலைமையிலான குழுவினர் அடைக்கலசாமியிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆவணங்களை சரிபார்த்த பின்னர், அடைக்கல சாமி தேவைப்படும் நேரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வருமான வரி துறை அதிகாரிகள் அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து திரும்பினார்.
அடைக்கல சாமி வீட்டில் இருந்து ரொக்க பணம் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!