தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சி புரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, 2019ல் தேர்தல் நடத்தப்பட்டது. புதிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021ல் நடத்தப்பட்டது. கடந்த 2019ல் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவி காலம், வரும் டிசம்பரில் நிறைவடைய உள்ளது. எனவே, மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளை துவக்கி உள்ளது. இதனால், 2021 தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களின் பதவி காலம் நிறைவடைவதற்கு முன் தேர்தல் நடத்தப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட கலெக்டர்களுக்கு, மாநில தேர்தல் ஆணைய செயலர் பாலசுப்ரமணியம் கடிதம் எழுதி உள்ளார். அதில்.. கடந்த 2021 ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்களின் பதவி காலம், வரும் டிசம்பரில் நிறைவடைய உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படையில், அவர்களின் பதவி காலத்தை ஐந்து ஆண்டுகள் வரை தொடர கோரிஉள்ளனர். தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி, கிராம ஊராட்சி தலைவரின் பதவி காலம், உள்ளாட்சி அமைப்பின் முதல் கூட்ட நாளில் இருந்து, ஐந்து ஆண்டுகள் வரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2021ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம், 2026 அக்., 19ல் முடிவடைகிறது. தேவை இல்லாமல் பதவி காலம் குறித்து குழப்பம் அடைய வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கடிதத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர்களை அழைத்து, மாநில தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை படித்து காட்டுமாறு, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.
9 மாவட்டங்களுக்கு தற்போது தேர்தல் உண்டா? .. மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்..
- by Authour

