நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று இரவு வளசரவாக்கம் போலீசில் ஆஜரானார். அவரிடம் போலீசார் சுமார் 1 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் அவர் நிருபர்களை சந்தித்து கூறியதாவது.. “போலீஸ் விசாரணையில் சென்ற முறை கேட்ட அதே பழைய கேள்விகளையே இந்த முறையும் கேட்டனர். புதிய கேள்விகள் ஏதும் கேட்கப்படவில்லை. விசாரணைக்கு தாமதமாக வர காவல் துறையினரே காரணம். என்னை அவமானப்படுத்த வேண்டுமென்ற நோக்கில் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். விசாரணைக்கு மீண்டும் தேவைப்பட்டால் ஆஜராக தயார். போலீஸ் விசாரணையில் என்ன நல்ல முறையில் நடத்தினர். இந்த வழக்கை விசாரித்து முடிக்க மூன்று மாதம் கால அவகாசம் உள்ளது. மூன்றே நாளில் இதை விரைந்து செய்ய வேண்டிய அவசியம் என்ன? எனக்கு சம்மன் கிடைத்த போது நான் பயணத்தில் இருப்பதாக தெரிவித்தேன். மீண்டும் கொடுத்த சம்மனை அடுத்து போலீஸ் விசாரணைக்கு ஆஜரானேன். போலீஸ் தரப்புக்கு இந்த வழக்கில் அழுத்தம் தரப்படுகிறது. ஆளும் திமுக அரசு இந்த வழக்கை நீட்டித்துக் கொண்டு செல்கிறது. என் வீட்டின் கதவில் ஒட்டப்பட்ட சம்மனை அகற்றியதில் எந்த தவறும் இல்லை. எங்கள் வீட்டில் இருந்த இருவரை கைது செய்ததும், அவர்களை தாக்கியதும் தவறு. சம்மனை ஒட்டியது வளசரவாக்கம் காவல் நிலைய அதிகாரிகள். அப்படி இருக்கும் போது நீலாங்கரை காவல் நிலைய அதிகாரிகள் ஏன் எங்கள் வீட்டில் இருந்தவர்களை கைது செய்ய வேண்டும். கருணாநிதி என்னை கைது செய்து தலைவர் ஆக்கினார். இப்போது இவர்கள் என்னை கைது செய்து முதல்வர் ஆக்க உள்ளனர். கடந்த தேர்தலில் தனித்து நின்று அடையாளம் பெற்றோம். எங்களுக்கு 36 லட்சம் வாக்குகள் விழுந்தன. வாக்குக்கு பணம் கொடுக்காமல் இதை பெற்றுள்ளோம். என் மீதுள்ள நற்பெயரை சிதைக்கும் வகையில் அரசு இதை செய்துள்ளது. புகார் அளித்த நடிகை கடந்த 15 ஆண்டுகளாக என்னை அவமானப்படுத்தி வருகிறார். விரும்பி வந்து அவர் உறவு வைத்துக் கொண்டார். எனக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. குழந்தைகள், குடும்பம் ஆகிவிட்டது. என் மீதான பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டதா?” என்று கேள்வி கேட்ட சீமான் “அரசியல் களத்தில் நான் ஒரு பக்கமும், விஜய் ஒரு பக்கமும் நிற்கிறார். என்றைக்கும் அவர் எனது அன்புத் தம்பி தான். மாண்புமிகு முதல்வர் அப்பா ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” எனகூறினார். இந்த விசாரணையின்போது சுமார் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் போலீஸ் தரப்பில் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு சீமான் அளித்த பதில் அனைத்தும் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. காவல் துறையின் இணை ஆணையர் அதிவீர பாண்டியன், உதவி ஆணையர் செம்பேடு பாபு மற்றும் சில அதிகாரிகள் சீமானிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் சீமானை மீண்டும் அழைத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஒரு மணி நேர விசாரணை .. சீமானை மீண்டும் அழைக்க முடிவு

