அண்மையில் மதுரை ஆதீனம் சென்ற வாகன சம்பவத்தில் தன்னைக் கொல்ல முயற்சி நடப்பதாக அவர் தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் மதுரை ஆதீனம் பொய்யான தகவல்களை கூறி தமிழ்நாட்டில் மத கலவரத்தை தூண்ட நினைப்பதாகவும் எனவே அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு இயக்கங்களை சார்ந்த இருபதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மதுரை ஆதீனத்தை கைது செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மதுரை ஆதீனம் தமிழகத்தில் மத கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதற்காகவே செயல்பட்டு வருவதாகவும் அவர் மீது தற்பொழுது வரை எந்த வழக்கும் பதியப்படாத நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.