பர்சை திருட முயன்ற வாலிபர் கைது
திருச்சி, மலைக்கோட்டை, மேட்டு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (57) இவர் நேற்று அம்மாமண்டபம் படித்துறையில் குளிக்க வந்தார். அப்போது அவரது செல்போன் மற்றும் உடமைகளை படித்துறையில் வைத்துவிட்டு குளிக்க சென்றபோது மர்ம நபர் செல்போன் மற்றும் அவரது பர்ஸை திருட முயன்றார். அவரை ஆறுமுகம் கையும் களவுமாக பிடித்து திருவரங்கம் குற்ற பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் துறையூர் கண்ணனூரை சேர்ந்த சிவா (27) என்பது தெரிந்தது. இவரை போலீசார் கைது செய்தனர்.
இருசக்கர வாகனம் மோதி கணவன் சாவு.. மனைவி கண் முன்னே சம்பவம்
திருச்சி, உறையூர், வடிவேல் நகரை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது38). இவரது மனைவி புவனேஸ்வரி (வயது35).இருவரும் நேற்று முன்தின 13 ந்தேதி உறையூர், குறத்தெரு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது அந்தவழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், இவர்கள் மீது மோதினார். இதில் தியாகராஜன் தலையில் பலத்த காயமடைந்தார்.புவனேஸ்வரிக்கு லேசான காயம் ஏற்பட்டது இதை எடுத்து இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு சிகிச்சை பெற்று வந்த தியாகராஜன் மே 14ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத நபர் குறித்து விசாரிக்கின்றனர்.இந்த விபத்து சம்பவம் மனைவி கண் முன்னே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கஞ்சா விற்றவர் கைது..
திருச்சி திண்டுக்கல் சாலை பிராட்யூர் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக செசன்ஸ் கோர்ட் போலீசாருக்கு மே 14 ந்தேதி தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டு புதுக்கோட்டை மாவட்டம் அன்னை நகரை சேர்ந்த ஷகின் பைசலை (வயது22) கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ரூ. 2 ஆயிரத்து 400 மதிப்புள்ள 80 கிராம் கஞ்சா, ரூ.300 பணம் மற்றும் கஞ்சா விற்க பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
போலி பாஸ்போர்ட் 2 பேர் கைது
நாகை மாவட்டம், வேளாங்கன்னியை சேர்ந்தவர் கோபி அலெக்சாண்டர் (வயது53), மே 13ந் தேதி மலேசியா செல்ல திருச்சி விமான நிலையம் வந்தார். இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள்அவரது பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தனர். இந்த சோதனையில் சோதனையில் அவர் பிறந்த தேதி மற்றும் பிறந்த ஊரை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரிந்தது. இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம், வடக்கு தெருவை சேர்ந்தவர் அஸ்மத்ரமேஷ் (வயது47). மே 13ம் தேதி மலேசியா செல்ல திருச்சி வந்தார், இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனையில் அவர் பிறந்த ஊர் மற்றும் தந்தை பெயரை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரிந்தது. இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் புகாரின் பேரில் இந்த 2 பேரையும் ஏர்போர்ட் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சுவர் இடிந்து கட்டிட தொழிலாளி பலி…
திருச்சி சோமரசம்பேட்டையை அடுத்த அதவத்தூரை சேர்ந்தவர் கந்தன் (65), கட்டிட வேலை செய்து வருகிறார். மே 12ம் தேதி இவர் திருவரங்கம், அம்மாமண்டப சாலை அருகே கட்டிடத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சுமார் 8 அடி உயரமுள்ள சுவர் இடிந்து இவர் மீது விழுந்தது, அவரை தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அதிகாரிகள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மே 13ம் தேதி உயிரிழந்தார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் கட்டிட பொறியாளர் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.