ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நிபந்தனை இல்லாமல் ரூபாய் 2 லட்சம் வரை விவசாய கடன் வழங்க வேண்டும்.
பெரும் முதலாளிகள் பயனடையும் வகையில் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் மட்டுமே விவசாய கடன் வழங்கும் நடைமுறையை வங்கிகள் கைவிட வேண்டும். நகை கடன் வழங்குவதற்கு நகையை விலைக்கு வாங்கிய ரசீதுகளை விவசாயிகளிடம் கேட்கும் முறையை கைவிட வேண்டும்.
நகையின் தரத்தை வங்கி ஊழியர்கள் நிர்ணயம் செய்ய வேண்டும். வங்கிக்கு வெளியே நகைக்கான தரச் சான்றுகளை பெற்று வர வேண்டும் என்று பொதுமக்களை நிர்பந்தம் செய்வதை வங்கிகள் கைவிட வேண்டும். சந்தை விலைக்கு ஏற்ப நகையின் மதிப்பில் 80 விழுக்காடு கடன் வழங்க வேண்டும்.
ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளையும், நீர்வரத்து பாதைகளையும் தூர்வார வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முறையை கைவிட வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி பாரத ஸ்டேட் வங்கி மண்டல தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாநிலத் துணைத் தலைவர் மேகநாதன், செய்தி தொடர்பாளர் பிரேம் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.போராட்டக்காரர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த சம்பவத்தால் அங்கே சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
