முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான செந்தில் பாலாஜி இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு சார்பில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார். காலை9 மணிக்கு முதல் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து வரிசையாக நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அடுத்தடுத்த பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடப்பதால் பெரும்பாலும் விஎஸ்பி நடந்தே சென்றார். இதனால் வீதிகள் முழுவதும் மக்கள் வெள்ளமென திரண்டு பேரணி போல னெ்றனர். 
குறிஞ்சி நகர், வடக்குத் தெரு, தாந்தோணி, வஉசி தெரு, அசோக்நகர், பாலாஜி காடர்ன், திண்ணப்பா நகர், மாரியம்மன் கோவில் வீதி, அம்மன் நகர், கே. கே. நகர், உள்பட பல்வேறு இடங்களில், சாலை மேம்பாடு, ஆழ்துைளை கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டி, கழிவு நீர் வடிகால் சீரமைத்தல் உள்ளிட்ட அடிப்படை பணிகளை அவர் தொடங்கி வைத்தார். சுமார் 35.90 கோடி ரூபாய் மதிப்பில் இந்த பணிகள் நடந்து வருகிறது.
தொடர்ந்து நிகழ்ச்சிகளில் செந்தில்பாலாஜி பங்கேற்று வருகிறார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் உற்சாகமாக வரவேற்று கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அப்போது பெண்கள், தங்கள் குழந்தைகளை கொண்டு வந்து கொடுத்து பெயர்சூட்டும்படி கூறினார். அந்த குழந்தைகளுக்கு செந்தில்பாலாஜி பெயர் சூட்டி வாழ்த்தினார்.
செந்தில் பாலாஜிக்கு ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்ற பொதுமக்கள் தாங்கள் ஏற்கனவே விடுத்த கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்ததற்காக நன்றி தெரிவித்தனர்.
செந்தில் பாலாஜியுடன், மாவட்ட கலெக்டர் தங்கவேலு, மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், ஆணையர் சுதா மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.



