Skip to content

தஞ்சை அருகே நாளை ஜெம்புகேஸ்வரர் கோவிலில் புதிய தேர் வௌ்ளோட்டம்

தஞ்சை மாவட்டம், காசவளநாடு கோவிலூரில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயில் உள்ளது. பழமையான இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன் பங்குனி உத்திர பிரமோத்சவத்தின் போது தேரோட்டம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு தேர் பழுதானதால் தேரோட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோயில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தினை தொடர்ந்து பங்குனி உத்திர பிரமோத்சவ தேரோட்டம் நடத்த கோயில் நிர்வாகம் மற்றும் காசவள நாட்டார்களால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதிய தேருக்கான செலவினை வி.கே.சசிகலா நடராஜன் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஒரு மாத காலமாக புதிய தேர் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து நாளை (ஜூன் 10) மாலை 4.35 மணிக்கு தேர் வெள்ளோட்டம் நடைபெறவுள்ளது. தேர் வெள்ளோட்டத்தினை தொடர்ந்து வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது.

முன்னதாக இன்று (ஜூன் 9) மாலை கணபதி பூஜை, முதலாம் காலயாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்குகிறது. பின்னர் நாளை காலை 8.45 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 4.35 மணிக்கு 12 அடி உயர திருத்தேரின் வெள்ளோட்டமும் நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை காசவளநாட்டைச் சேர்ந்த 18 கிராமத்தினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் இணைந்து செய்து வருகின்றனர்.

error: Content is protected !!