தஞ்சாவூரில் நீதிபதியாக இருப்பவர் பூர்ண ஜெய ஆனந்த். இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த வருடம் இவர் புதுக்கோட்டையில் நீதிபதியாக இருந்தார். இப்போது தஞ்சை மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
இவர் திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நீதிமன்ற அலுவலக உதவியாளர்கள் உதயசூரியன், ஸ்ரீதர் குமார், காவலர் நவீன்குமார், ரெக்கார்டு கிளார்க் வாசு ராமசந்திரன், வழக்கறிஞர் தனஞ்செய ராமசந்திரன் இவர்கள் ஒரே காரில் சென்றனர். சாமி தரிசனம் செய்து விட்டு , மீண்டும் தஞ்சாவூர் நோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
தூத்துக்குடி – மதுரை பைபாஸ் ரோடு, எட்டயபுரம் அருகே மேல கரந்தை ஜங்ஷன் அருகே முன்னால் ஜிப்சம் லோடு ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரி மீது இவர்களது கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபததில் ஸ்ரீதர்குமார், நவீன்குமார், வாசு ராமநாதன், தனஞ்செய ராமசந்திரன் ஆகிய 4பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மேலும் நீதிபதி பூர்ன ஜெய ஆனந்த் மற்றும் அலுவலக உதவியாளர் உதயசூரியன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருப்புகோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரியை ஓட்டிவந்த கடலூர் மாவட்டம் பொம்மரக்குடி குளஞ்சி மகன் விஜய் ராஜ் (27) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான், விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து மாசார்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் இறந்த தனஞ்செயராமச்சந்திரன், நீதிபதிக்கு மைத்துனர் ஆவார். நீதிபதியின் தங்கையை இவர் திருமணம் செய்துள்ளார். தற்போது தனஞ்செய ராமச்சந்திரன் புதுக்கோட்டையில் வழக்கறிஞராக இருக்கிறார்.