டெல்டா மாவட்ட சாகுபடிக்காக கடந்த 12ம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கல்லணையில் இருந்து 15ம் தேதி தண்ணீரை பாசனத்துக்கு திறந்து வைத்தார். தற்போது டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளன.
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தமிழக முதல்வர் அணையை திறந்து வைக்கும்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 114.91 அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி திறக்கப்படுகிறது.
இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென குறையத் தொடங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நிாாமட்டம் 114. 13 அடியாக இருந்தது. அணையில் 84.416 டிஎம்சி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,040 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மேட்டூர் அணையின் நிர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே. ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 124 அடி உயரம் கொண்ட கே. ஆர்.எஸ். அணையில் இன்று காலை நிலவரப்படி 111 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 16,936 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதே அளவு தண்ணீர் வந்தால் கே. ஆர்.எஸ். ஒரு வாரத்தில் நிரம்பி விடும்.
அதன்பிறகு உபரி நீர் முழுவதும் மேட்டூர் அணைக்கு தான் வந்து சேரும். கபினி அணையின் நீர்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாட்டிலும் மழை கொட்டுகிறது. இதனால் இன்று காலை நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இது அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
கபினியின் மொத்த உயரம் 65 அடியில் 60 அடி நிரம்பி விட்டது. அணையின் பாதுகாப்பு கருதி இன்று மதியம் அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கபினியில் திறக்கப்படும் உபாி நீர் நேராக மேட்டூர் அணைக்கு வந்து சேரும். இன்று திறக்கப்பட்ட உபரி நீர் நாளை மறுநாள் அதிகாலை மேட்டூர் அணைக்கு வந்து சேரும். அதன் பின் நீர்மட்டம் மளமளவென உயரும். எனவே இந்த மாதத்திலேயே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.