அகமதாபாத் விமான விபத்து, காரணத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல், அமெரிக்கா சென்றது கருப்பு பெட்டி
உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய அகமதாபாத் விமான விபத்து நடந்து இன்று எட்டாவது நாள்…… கடந்த வாரம் வியாழக்கிழமை மதியம் 1.39 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி விடுதிக்குள் பாய்ந்து வெடித்து சிதறி தீப்பிடித்தது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 242 பேரில் ஒரே ஒருவரை தவிர மற்ற 241 பேரும் கருகி இறந்தனர். பெரும்பாலானவர்களின் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து போனது. ஆனாலும் டிஎன்ஏ டெஸ்ட் மூலம் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இறந்தார்.
மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்கள் சிலரும் இந்த விபத்தில் இறந்தனர். எனவே பலி எண்ணிக்கை 270ஐ தொட்டது.
விமானம் புறப்பட்ட 2 நிமிடத்திற்குள் வெடித்து சிதறி இருக்கிறது. அதாவது 2 நிமிடத்தில் போயிங் விமானம் 2 ஆயிரம் அடி முதல் 3 ஆயிரம் அடி உயரம் மேலே எழும்பி சென்று இருக்க வேண்டும். ஆனால் விபத்துக்குள்ளான விமானம் 625 அடி முதல் 675 அடி உயரத்துக்குள் தான் பறந்து இருக்கிறது. அதற்கு மேல் அந்த விமானத்தால் மேலே எழும்ப முடியவில்லை.
இந்த நேரத்தில் தான் விமானத்தில் உள்ள கோளாறை அறிந்த விமானி கட்டுப்பாட்டு அறைக்கு மே டே அவசர அழைப்பை விடுத்து இருக்கிறார். கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு பதில் அளிக்கும் முன் விமானம் விபத்துக்குள்ளாகி விட்டது.
உடனடியாக மீட்பு பணிகள், நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டன. அடுத்ததாக கருப்பு பெட்டியை தேடும் பணி நடந்தது. விமானத்தின் வால் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கருப்பு பெட்டியை தேடி கண்டுபிடித்தனர்.
விமானம் விபத்துக்குள்ளான நிலையிலும் கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல்கள் வெளிவந்து கொண்டு இருக்கும். அதைக்கொண்டு கருப்பு பெட்டி இருக்கும் இடத்தை எளிதில் கண்டு பிடிக்க முடியும். மேலும் இந்த கருப்பு பெட்டி எளிதில் சேதமடையாதபடி உருவாக்கப்பட்டிருக்கும்.
விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்பதால் போயிங் நிறுவன வல்லுனர்களும் அகமதாபாத் வந்து விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.
கருப்புப் பெட்டியில் உள்ள விமான தரவு ரெக்கார்டர் 25 மணி நேர தரவுகளை சேமிக்கும் திறன் கொண்டது, ஆனால் குரல் பதிவுக் கருவி கடைசி 2 மணி நேர உரையாடல்களை மட்டுமே பதிவு செய்யும். விமானத்தின் வேகம், உயரம் மற்றும் வானிலை போன்ற தகவல்களையும் இது பதிவு செய்யும்.
விமான விபத்து நடந்ததும், அதன் காட்சிகளை பார்த்த விமான தொழில் நுட்ப வல்லுனர்கள், ஓய்வுபெற்ற விமானிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.
விமானத்தில் இரு இன்ஜின்களும் பழுதடைந்ததால் விமானம் விபத்துக்குள்ளானது என்றும், பறவைகள் மோதியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர்.
எந்திர கோளாறு, கலப்பட பெட்ரோல், மற்றும் பெட்ரோல் அடைப்பு, மனித தவறுகள், அதிக எடை போன்றவை காரணமாக இருக்கலாம் என சிலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் விபத்துக்குள்ளான விமானத்தின் இன்ஜின் நல்ல நிலையில் இருந்ததாக அந்த நிறுவனம் கூறி உள்ளது.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் டாடா குழுமத்திற்கு சொந்தமானது. டாடா குழுமத்தின் தலைவராக இருப்பவர் நாமக்கல்லை பூர்வீகமாக கொண்ட சந்திரசேகரன். இவர் திருச்சி என்ஐடியில் படித்தவர்.
இந்த விபத்து குறித்து அவர் கண்ணீர் மல்க ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் முதலில் மன்னிப்பு கேட்டு உள்ளார். மேலும் அவரது அறிக்கையில்,
ஆறுதல் சொல்வது மிகவும் கடினமான ஒன்று. நாம் என்ன சொன்னாலும் அவர்களின் இழப்பை ஈடு செய்ய முடியாது. அவர்களின் துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன்.குடும்பங்களை இழந்தவர்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் துணை நிற்பேன். அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கு நாங்கள் துணை நிற்போம். அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும், எந்த வகையில் வேண்டுமானாலும், உதவி செய்வேன்.
விமான விபத்திற்கு எஞ்சின் கோளாறு காரணமில்லை. அனுபவம் வாய்ந்த விமானிகளே விமானத்தை இயக்கினர். முதற்கட்ட விசாரணை முடிவு வரும்வரை, விபத்திற்கான முழுக்காரணம் குறித்து எந்த முடிவுக்கும் வர இயலாது என்று அவர் கூறி உள்ளார்.
அவரது அறிக்கையின்படி விபத்து நடந்து 8 நாள் ஆன நிலையிலும், விபத்துக்கான காரணத்தை துல்லியமாக இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது மட்டும் தெளிவாகிறது.
எந்த சூழ்நிலையிலும் கருப்பு பெட்டி சேதமடையாதபடி உருவாக்கப்படுகிறது. அப்படி இருந்தும் அகமதாபாத் விமான விபத்தில் கருப்பு பெட்டி பெருமளவில் சேதம் அடைந்து விட்டது.
இதற்கு காரணம் விமானம் சுமார் 20 நிமிடம் தீப்பிடித்து எரிந்து உள்ளது. அதுவும் சாதாரண தீயல்ல., விமானத்தில் 1 லட்சம் லிட்டருக்கும் அதிகமான பெட்ரோல் இருப்பு இருந்து உள்ளது. 1 லட்சம் லிட்டர் பெட்ரோலும் எரிந்ததால் கருப்பு பெட்டியும் பெரும்பகுதி சேதமடைந்து உள்ளதாக தெரிகிறது.
வழக்கமாக மீட்கப்பட்ட கருப்பு பெட்டியில் இருந்த 10 நாட்களுக்குள் விபத்துக்கான காரணத்தை கண்டுபிடித்து விடலாம். அதிகபட்சமாக மேலும் 5 நாட்கள் ஆகலாம். ஆனால் 8 நாள் ஆன நிலையிலும் அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை.
பெட்டிக்கு வெளிப்புறத்தில் ஏற்பட்ட சேதத்தால், டிஜிட்டல் ரெகார்டிங் தரவை மீட்டெடுப்பது சாத்தியமில்லை என இந்திய நிபுணர்கள் தெரிவித்து விட்டனர். எனவே அதிநவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தரவுகளை மீட்டெடுக்க அமெரிக்கா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கருப்பு பெட்டி முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே விமான விபத்துக்கான காரணம் தெரியவரும்.
அங்கு போயிங் நிறுவனத்தில் ஆய்வு மெற்கொள்ளப்பட உள்ளது. அதன் பிறகு தான் விபத்துக்கான காரணங்கள் தெரியவரும் என்பது தான் இப்போதுள்ள நிலை.
விபத்துக்கான காரணங்களை சரியாக கண்டுபிடித்து, இனி வருங்காலங்களில் இதுபோன்ற விபத்து ஏற்படாவண்ணம், தடுப்பதுடன், விமான பயணத்திற்கு முழு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.