காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா இன்று அக்கட்சியினரால் நாடு எங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மக்களவை தொகுதி, மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதி இரண்டிலுமே காங்கிரஸ் உறுப்பினர்களே எம்பி, எம்எல்ஏவாக உள்ள நிலையில், மயிலாடுதுறையில் ராகுல்காந்தி பிறந்த நாளை காங்கிரஸ் கட்சியினர் வெகு உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதன் முதல் நிகழ்வாக மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருமை இல்லம் என்ற ஆதரவற்ற முதியோர் இல்லத்தில்
முதியவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. எம்பி சுதா, எம் எல் ஏ ராஜகுமார் ஆகியோர் முதியவர்களுக்கு காலை உணவு பரிமாறி, முதியவர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். எம்பி சுதா வாய் பேச முடியாத மூதாட்டி ஒருவரை கட்டி அணைத்து முத்தமிட்டு நெகழ்ச்சியை ஏற்படுத்தினார். தொடர்ந்து, சோழபேட்டை ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை வரவழைத்து அவர்களுக்கு மரியாதை செய்தனர். அப்போது எம்பி சுதா தூய்மை பணியாளர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.